29/07/2014

இப்படி செய்தால் தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்...!


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-

உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.

வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:

முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.

உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.

இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.

நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.

காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.

தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.
+

மாம்பூவின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா...?


முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.


தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

+

உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன..? - இங்க தெரிஞ்சிக்கலாம் வாங்க..!


உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன?

உப்பிட்டவரை உள்ளளவும் நினை...’
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...’

இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னை போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வியர்வையும், அதன் மூலம் வெளியேறும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால், அந்த அளவு உப்பு தேவைப்படுகிறது. அதுவே குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது. உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால் பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.

கூடினாலும் பிரச்னை... குறைந்தாலும் பிரச்னை...

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

யாருக்கு எவ்வளவு உப்பு?

சாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்...

ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்... இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில் சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.

அயோடைஸ்ட் உப்பு நல்லதா?

கல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின் என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற நம்மைப் போன்ற மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும்.

 அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.

எந்த உணவில் எவ்வளவு உப்பு?
(ஒவ்வொரு 100 கிராமிலும்)

தானியங்கள் - 4 முதல் 18 மி.கி.

பருப்பு வகைகள் - 20 முதல் 95 மி.கி.

உப்பு சேர்த்த வேர்க்கடலை - 16 முதல் 41 மி.கி.

பால் மற்றும் பால் பொருள்கள் - 50 மி.கி.

(பசும்பாலில் உப்பு சற்று அதிகம். உப்பு சேர்த்த வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட
சீஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால் அவற்றையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.)
அசைவ உணவுகளில் முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றில் உப்பு உண்டு.

பன்றிக்கறியிலும், கருவாட்டிலும் அதிகளவில் இருப்பதால், உப்பின் தேவை அதிகமிருப்போருக்கு மட்டுமே இவற்றைக் கொடுக்க வேண்டும்.

காய்கறிகள் - 4 முதல் 71 மி.கி.

பழங்கள் - 1 முதல் 3 மி.கி.

காய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவுதான். ஆனாலும், காய்கறி மற்றும் கீரைகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகம்.

இளநீரிலும் பொட்டாசியம் அதிகமுண்டு. அதனால்தான் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கச் சொல்கிறார்கள்.

இளநீர் குடித்ததும், அவர்கள் புத்துணர்வாகி, எழுந்து உட்கார்வதைப் பார்க்கலாம்.

அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம்தான்... உப்பு!
+

மருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் - உங்களுக்காக...!


வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.


இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும். 
+