02/08/2014

உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள் - உங்களுக்காக..!


உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள்.

ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒருசில கனிமங்களும் அடங்கும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது 8 வகை வைட்டமின் பி-க்களை கொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவி புரிகிறது. அதற்கு காரணம் உடல் கார்போஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவி புரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவும். அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும். ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி
உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர். வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி
உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும். அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது. இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்
கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது. இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.

குரோமியம்
உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல் நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் அது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்
கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும். இது இல்லையென்றால், கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைபட்டு போகும். சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது.

ஜிங்க்
தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம்.
+

உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்...!


நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்கட், கேட் என்று சாப்பிடுகிறோம்...


இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும்.. அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமும் அதே நேரம் உடனடிச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை பற்றி பார்ப்போம்..

முதல் உணவு

ஓட்ஸ்:


தினமும் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி உடனே உடலுக்கு கிடைக்கிறது.

உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும் "அவினின்" என்ற இரசாயனப் பொருளும் இருக்கிறது. இதனால் உடலும் உள்ளமும் உடனடியாகச் சக்தி பெருகிறது.

இந்த ஓட்ணினை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.

வைட்டமின் "சி" நிறைந்த உணவுகள்:

முதுகுத் தண்டிலும் இரத்த அணுக்களிலும் வைட்டமின் சி அதிகம் கலந்துள்ளது. நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் இந்த "சி" உள்ளது.

உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில் வைட்டமின் "சி" சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.

நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது வைட்டமின் "சி"
இதனை நாம் ஆரஞ்சு சாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து எளிதாகப் பெறலாம். இதில் "சி" அதிகம் உள்ளது.

இது தவிர தினமும் ஒரு கப் கொண்டைக்கடலை, அல்லது கடலை பருப்பு சுண்டல் சாப்பிடலாம்.

காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம். இதிலும் வைட்டமின் "சி" இருக்கிறது.

நீரழிவு நோயாளிகள் ஊறவைத்த கொண்டகடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக்கும்.

முட்டைகோஸ் சூப், பாசிப்பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்ச பயிறு சாலட் இதிலும் அதிகமாக வைட்டமின் "சி" அதிகமாக இருக்கு.

தினமும் காலை சூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.

தண்ணீர்;

தண்ணீரில் எந்த சத்துக்களோ அல்லது எந்த கலோரிகளோ எதுவும் இல்லை.. ஆனால் அரை டம்ளர் தண்ணீர் உடலில் குறைந்தாலும் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும்..

தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிவிடும்

ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

பார்லி தண்ணீர்:

பார்லி அரிசியில் மூளைக்கு புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. நரம்புகளைப் பலப்படுத்தும் "பி" வட்டமினும் உள்ளது. பார்லியைக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை பாட்டிலில் வைத்து உடலில் சோர்வு ஏற்படும் பொழுது ஒரு டம்ளட் பார்லி தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் கலந்தவுடன் உடலின் குளூக்கோஸ் அளவு உயர்ந்து ஞாபகசக்தி அதிகரிக்கும்... மிகவும் துடிப்புது உற்சாகத்துடன் வேலை செய்வதனை நீங்களே உணர்விகள்

ராகிமாவு:

இதில் கால்சியம் அதிகம். .. இதனை தினமும் ஒரு வேலை சாப்பிட்டுவந்தால் உடலுக்கு தேவையான சக்தியினை இது தருகிறது... கடினமான உழைப்பாளிகள் காலையிலும் மாலையிலும் 2 கப் கேழ்வரகுக் கஞ்சி, அல்லது 2 கேழ்வரகு ரொட்டியோ சாப்பிடுவதால் குறைந்தது 5 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை இதில் உள்ள கால்சியம் புதுப்பித்து விடுகிறது
+

அம்மான் பச்சரிசி... என்ன ஒண்ணும் புரியலையா..? - அப்போ இதப்படிங்க..!


அரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு பதிவிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi
English - Snake weed
Sanskrit - Dugdhika
Telugu - Reddine narolu
Malayalam - Nela paalai
Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
+

சின்ன விஷயங்களின் எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்க...!


மஞ்சள்
இந்தியக் கலாசாரத்தில் மஞ்சளுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. வாயிற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும் மஞ்சள் கரைத்த தண்ணீரை வீடுகளில் தெளிப்பதற்கும் அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையே காரணம். மஞ்சள் நிறத்துக்கு நுண் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் அதிகப்படுத்தும் திறன் உண்டு என்றும் அதன் வாசனை மன நிம்மதியைத் தரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுகளில் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரணப் பொருளாக மட்டுமின்றி, உலக நாடுகளே பிரமிக்கின்ற அளவு மருத்துவத் தன்மை கொண்டுள்ளது. அந்த மஞ்சளை எளிய முறையில் பயன்படுத்தி அதன் அபார ஆற்றலைப் பெற்று உடலினை உறுதி செய்வோம்!

என்ன செய்ய வேண்டும்...?
இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்து சூடான பாலிலோ அல்லது நீரிலோ போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கவும்.

என்ன பலன்..?
* நிறத்தைக் கூட்டும் வைட்டமின்கள் இருப்பதால், உடலுக்கு நல்ல நிறத்தையும் மேனி எழிலையும் உண்டாக்கும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

* சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பில்லாமல் தோலினைப் பாதுகாக்கும் அற்புதமான சக்தி மஞ்சளில் அடங்கியிருக்கிறது.

* மஞ்சளில் உள்ள குர்குமின் புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

* சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.

* மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

* வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி பெருமளவில் உள்ளது.

யாருக்கு எல்லாம் முக்கியம்..?
உடல் நலனில் அக்கறை வைத்து, கிருமித்தொற்றின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் அத்தனை பேருக்கும் முக்கியம்தான்.
+

மல்லிகைப் பூவுக்கும் மருத்துவக் குணங்கள் உண்டுங்க...!


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
+

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் 15 உணவுகள்..! - உங்களுக்காக...


ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உணவுகளில் உள்ளன.

அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், மெலடோனின், வைட்டமின்களில் ஏ, சி, ஈ, பைட்டோ கெமிக்கல்களான பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் மற்றும் தாது சத்துக்களான செலீனியம் மற்றும் ஜிங்கு போன்றவை. இவை அனைத்து உடலில் போதிய அளவு இருந்தால், உடலில் உள்ள ரேடிக்கல்கள், கழிவுகளாக மாற்றப்பட்டு, மலம் மற்றும் சிறுநீர் வழியே வெளியேற்றப்படும்.

எனவே தான், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. இந்த உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, சருமமும் அழகாக மின்னும். அதுமட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.

கிவி
வைட்டமின் சி அதிகம் உள்ள மற்ற பழங்களைப் போன்றே, கிவிப் பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை தவறாமல் சாப்பிடுங்கள்.

பரட்டைக்கீரை
இந்த பச்சை இலை காய்கறியில் பாலிஃபீனோலிக் ஃப்ளேவனாய்டு என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாவது தடுக்கப்படும்.

பசலைக் கீரை
கீரைகளில் பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக பசலைக் கீரையில் லுடீன் (lutein), ஸீக்ஸாக்தைன் (zeaxanthin) என்னும் கரோட்டினாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது மூளையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். அதிலும் அல்சீமியர் நோய் வராமல் தடுக்கும்.

அவகேடோ
அவகேடோவில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, பொலிவோடு இருக்கும்.

களைக்கோசு
இதில் பைட்டோ கெமிக்கல் அதிகம் இருப்பதோடு, உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

பீட்ரூட்
பூட்ரூட்டில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு பிட்டாகவும் இருக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ராக்கோலி
மற்ற பச்சை இலைக் காய்கறிகளைப் போன்றே, ப்ராக்கோலியிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராடவும் சிறந்ததாக உள்ளது.

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனெனில் இந்த ஆப்பிளிலும் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

பூண்டு
பூண்டில் ஆன்டி பயாடிக் பொருள் அதிகம் உள்ளது. அதே சமயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, பி மற்றும் சி, செலீனியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவையும் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள இரத்த அழுத்தம் குறைகிறது.

குடைமிளகாய்
குடைமிளகாயில் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே எந்த வகையான குடைமிளகாயையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.

பீன்ஸ்
அனைத்து வகையான பீன்ஸிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் புரோட்டீன், வைட்டமின் மற்றும இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றிவிடும்.

மாதுளை
சுவை மிகுந்த பழமான மாதுளையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

தக்காளி
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, உடல் எடையை குறைக்கலாம்
+