20/08/2014

உணவுப்பொருட்களை கெடாமல் பாதுகாக்கும் எலுமிச்சை..!

வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் நாம் பல்வேறு பொருட்களை வைப்பது வழக்கம். பெரும்பாலும் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.

அந்நிலையில் பஞ்சினை சிறிய பந்துபோல் சுருட்டி அதை எலுமிச்சை சாற்றில் நனைத்து அல்லது ஸ்பாஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மணி நேரங்கள் வைத்திருக்க துர்நாற்றம் விலகும்.

* வெண்மை நிறமுடைய காய்கறிகளை சமைக்கும் போது அவை எளிதில் செம்மையாக மாறுவது இயற்கை. உதாரணம் காலிபிளவர். இவற்றை சமைப்பதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றைப் பரவலாகப் படும் படி தெளித்து வைத்திருந்து சமைத்தால் அவற்றின் வெண்மை நிறம் மாறாமல் இருக்கும்.

* காய்கறிகளை நறுக்க உபயோகப்படும் பலகை வெங்காயம், பூண்டு, இறைச்சி ஆகியவற்றை நறுக்கியதால் ஏற்பட்ட நாற்றம் போக எலுமிச்சம்பழத்தை துண்டித்து ஒரு பகுதியைக் கொண்டு அப்பலகையை நன்கு தேய்ப்பதாலோ அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தேய்த்துக் கழுவுவதாலோ நாற்றம் நீங்கப் பெறும்.

* சமையல் அறையில் எறும்புகள், பூச்சிகள் துளையிட்டு பெருகுவதால் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை உள்ளே விடலாம்.

* கடைகளில் வாங்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை அவற்றின் மேல் படிந்துள்ள அழுக்காலும், அவற்றிற்கு இடப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றாலும் விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பது இயற்கை.

இதைப் போக்க ஒரு தெளிப்பானில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி காய்கறிகள், கீரைகள், கனிகள் இவற்றின் மீது தெளித்து சிறிது நேரம் வைத்திருந்து கழுவிவிட்டுப் பயன்படுத்துவதால் அவற்றின் மீதுள்ள நச்சுக்கள், கிருமிகள் விலகி நல்ல மணத்தையும் பெற்று விடும்.

* நவநாகரீக உலகில் சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களும் டப்பாக்களிலும், பைகளிலும் அடைத்து வைக்கப்பட்ட ரசாயனக்கலவை மிக்க உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இதுதவிர்க்க இயலாததாகவும் மாறிவிட்டது.

இந்த உணவுப் பொருட்களுக்கு இடப்பட்ட செயற்கை வண்ணங்களும், நீண்ட நாள் உபயோகத்தில் இருக்கும் பொருட்டு கலக்கப்பட்ட ரசாயனப் பொருள்களாலும் ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் சேர்ந்து உடலையும், சீரண உறுப்புகளையும் கெடுக்கின்றன.

இதைத் தவிர்க்க அடிக்கடி எலுமிச்சை சாறு குடிப்பது நலம். இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்கி ரத்தம் சுத்தமாகி ஆரோக்கியம் நிலைபெறுகிறது. இது போன்ற வேறு பல மருத்துவ குணங்கள் எலுமிச்சையில் நிறைந்திருக்கிறது.
+

தினமும் முட்டையை சாப்பிடுவது நல்லதா..? - இதைப்படிங்க...!

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. முட்டையை அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும்.

நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.

முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்று நினைத்து இன்றைய இளைய தலைமுறையினர் வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண  பயப்படுகின்றனர்.. இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.

உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம். பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.

அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதிலாக அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் முழுஆரோக்கியத்தையும் பெறலாம்..
+

‘சொலானம் சுரட்டென்ஸ்’ - என்ன புரியலையா, அதாங்க கண்டங்கத்தரி...!


கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாகவைப்பது என்று பொருள். மனிதனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுப்பவை கற்ப மூலிகைகள். அவற்றில் ஒன்றுதான் கண்டங்கத்தரி. கண்டம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர்.

‘சொலானம் சுரட்டென்ஸ்’ (Solanum surattense) என்பது கண்டங்கத்தரியின் தாவரவியல் பெயர். இது சிறுபஞ்சமூல வகைகளில் (கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, பெருமல்லிகை) ஒன்றாகக் கருதப்படுகிறது. செடி வகையைச் சேர்ந்த இது, எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. கண்டங்கத்தரியின் நோய் தீர்க்கும் குணம்பற்றியும் அதை எப்படிச் சேர்த்துக்கொள்வது என்பதுபற்றியும் விரிவாக விளக்குகிறார் சுப்ரமணியபுரம் அரசு சித்த மருத்துவர் அருண்குமார்.

”சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்திப் பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். இது கோழை அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் குடல் வாயு அகற்றியாகவும் செயல்படும்.தலையில் நீர் கோத்தல், சூலை நீர் எனப்படும் கபநீர், பித்த நீர் இவற்றைச் சீராக்கும். மேலும், தொண்டையில் ஏற்படும் நீர்க்கட்டு, அடைப்பு, மூக்கில் நீர் வடிதல், சளி, மூச்சுத்திணறல், இருமல், ஈழை, இழுப்பு போன்ற பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்க வல்லது கண்டங்கத்தரி.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. கண்டங்கத்தரி, இண்டு, இசங்கு, தூதுவளை, ஆடாதொடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியைத் தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.

கண்டங்கத்தரி கஷாயம்:- இண்டு, இசங்கு, கண்டங்கத்தரி, ஆடாதொடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்துப் பொடிக்கவும். இந்தப் பொடியில் சரிபாதியை எடுத்து இரண்டு கோப்பை நீரில் கொதிக்கவைக்கவும். நீர் கொதித்து ஒரு கோப்பையாகச் சுண்டிப்போனதும் வடிகட்டி அருந்த வேண்டும். இதேபோல் மற்றொரு பங்கை மாலையில் காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.

கண்டங்கத்தரி விதையைக் காயவைத்து எரிக்கும்போது வரும் புகையை வாய்க்குள் அடக்கினால் பல் வலி நீங்கும். வாயில் உள்ள கிருமிகள் அழியும். கசப்புத்தன்மை கொண்ட கண்டங்கத்தரிக் காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இருமல், சளி குணமாவதோடு, வயிற்றில் உள்ள கிருமிகளும் நீங்கி நன்கு பசி எடுக்கும். இக்காய்களை வற்றல் செய்தும் சாப்பிடலாம்.

கண்டங்கத்தரிப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இளைப்பு (உடல் இளைத்தல்) நீங்கி உடல் வலிமை அதிகரிக்கும். மேலும், பல் அரணை மற்றும் தோல் நோய்களையும் குணப்படுத்தும். பழத்தைக் காயவைத்துப் பொடித்து தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை கொடுத்துவரக் குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கண்டங்கத்தரிப் பழத்தைக் கொதிக்கும் நீரில் குழையவைத்து வடிகட்டிய பின் நான்கு பங்குக்கு ஒரு பங்கு சுரை விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி ஆறவிட்டு காதுக்குள் விட காது வலி நீங்கும்.

கண்டங்கத்தரி இலைச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால், தலைவலி, கீல் வாதம், அக்குள் நாற்றம் ஆகியவை சரியாகும். கண்டங்கத்தரி இலைச் சாறுடன் ஆளி விதை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிக் கால் வெடிப்புகளில் பூசிவர வெடிப்புகள் விரைவில் குணமாகும்.

வேர் 30 கிராம், சுக்கு ஐந்து கிராம், சீரகம் இரண்டு சிட்டிகை, கொத்தமல்லி இலை ஒரு பிடி ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். 100 மி.லி. அளவு வீதம் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு முறை குடித்துவர சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

கண்டங்கத்தரி நீர்:- கண்டங்கத்தரி வேர், ஆடாதொடை வேர் தலா 40 கிராம், உடைத்தெடுத்த அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வரும்வரை சுண்டக் காய்ச்சவும். 100 மி.லி.வீதம் தினம் நான்கு வேளை குடிக்க இரைப்பு இருமல் (ஆஸ்துமா), எலும்புருக்கி (க்ஷயம்) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் ஆகியவை தீரும்.”
+

கிராம்பின் மருத்துவ குணம் - அதுக்கு ரொம்ப முக்கியமாம்...!

கிராம்பின் மருத்துவ குணம்
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

 தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
+

புரதம் நிறைந்த... வேர்க்கடலை....! - அரியத் தகவல்கள்......

சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் (நிலக்கடலை) தான் இருக்கிறது.

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது.

இந்த வேர்க்கடலை நமது உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை வழங்குகின்றது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.


கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

 வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.


வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
+