15/08/2014

'' முசுமுசுக்கை '' - ஒரு மூலிகைச் செடியுனு உங்களுக்கு தெரியுமா..?

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

அமைதியின்மை போக்கும்:-

இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,
மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது. சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.

ஆஸ்துமா குணமாகும்:-

முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.

முசுமுசுக்கை தைலம்:-

முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.
+

மரமஞ்சள் துண்டுகள் பற்றி இதோ சில பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக...!

மரமஞ்சள் துண்டுகள் சிலவற்றைப் போட்டு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு அவுன்ஸ் நீரை உள்ளுக்குக் கொடுக்க அடிபட்ட மற்றும் வெட்டுக் காயங்களால் “டெட்டனஸ்” என்னும் கிருமிகள் தாக்கா வண்ணம் தடுப்பு மருந்தாகப் பயன்படும்.

தோல் நோய்கள் வந்தபோது மரமஞ்சளை 5 கிராம் அளவு எடுத்து 100 மி.லி. தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்தி சந்தி என இருவேளை குடித்து வர ரத்தம் சுத்தமாவதோடு தோல் நோய் நீங்கி மென்மையும் பளபளப்பும் பெறும்.

மரமஞ்சளைத் தீநீர் இட்டுக் குடிப்பதால் குரங்கு, நாய், பூனை, ஓணான், பல்லி போன்றவற்றின் கடிவிஷங்கள் முறியும்.

மரமஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயிலிட்டுக் குழைத்து அடிப்பட்ட காயங்கள், புண்கள், தோலின் மேல் தோன்றும் கொப்புளங்கள் ஆகியவற்றின் மேல் பூசி வர விரைவில் குணமாகும்.

மரமஞ்சளை குளிக்கும் நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குளிப்பதால் உடல் வலி, தசை வலி ஆகியன தணியும்.

சுமார் 5 கிராம் மரமஞ்சள் தூளைத் தேனில் குழைத்து இருவேளை தினம் சாப்பிட அதிக மாதவிடாய் போக்கு (மெனோரேஜியா), வெள்ளைப் போக்கு (லுக்கோரியா) ஆகியன குணமாகும்.

ரத்த மூலம் கண்டபோது 5 கிராம் மரமஞ்சள் தூளை நெய்யுடன் குழைத்து சாப்பிட விரைவில் குணமாகும்.

மஞ்சள் காமாலை கண்டபோது மரமஞ்சளைத் தேனில் குழைத்து சாப்பிட்டு வர சில நாட்களில் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் தாம் வழக்கமாகச் சாப்பிடும் மருந்துகளுக்குத் துணை மருந்தாக மரமஞ்சள் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி பருகிவர ஒரு சிறந்த துணை மருந்தாக இருந்து நோயைக் குணப்படுத்தும்.

மரமஞ்சளைப் பசும்பாலில் குழைத்து முகத்துக்கு மேற்பூச்சாக பூசி வைத்திருந்து மணிநேரம் கழித்து கழுவிவிட முகப் பருக்கள், கரும் புள்ளிகள், மென்மையான முடிகள் நாளடைவில் மறைந்துவிடும்.

மரமஞ்சள் மெழுகு :-மரமஞ்சள் 1 பங்குடன் 16 பங்கு நீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்ச வேண்டும். பின்னர் அதை வடிக்கட்டி மேலும் அடுப்பிலிட்டுக் காய்ச்சி மெழுகு பதமாக்கி வெயிலிலிட்டு உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

மரமஞ்சள் மெழுகை நெய்யில் குழைத்து சிறிது படிகாரம் சேர்த்து கண்களுக்கு மை போல் தீட்டிவர கண் சிவப்பு, கண்ணில் அழுக்குப் படிதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.

மரமஞ்சள் மெழுகைப் பொடித்து வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.

ஒருபங்கு மரமஞ்சள் மெழுகுடன் 30 பங்கு நீர் சேர்த்து கரைத்து ஆசன வாயைக்கழுவி வர முளை மூலம் சுருங்கி குணமாகும். இத்துடன் வெருகடி மரமஞ்சள் மெழுகுத் தூளை வெண்ணெயில் குழைத்து தினம் இருவேளை உள்ளுக்கு சாப்பிட்டு வர வேண்டும்.

சிறுநீர்ப் பாதையில் வலி கண்ட போது மரமஞ்சள் மெழுகை 5 கிராம் அளவு எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் நெல்லி வற்றல் பொடியையும் சேர்த்து ஒரு டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து குடித்து வர சிறுநீர்ப் பாதை அடைப்பு வீக்கம், வலி ஆகியன குணமாகும்.
+

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக்: சி.எஸ்.இ. எச்சரிக்கை..!

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள்:-டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.

குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது
+

மலட்டுத்தன்மையை நீக்கும் கேரட்

கேரட்டில் உள்ள ‘ஏ‘ வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா க«ராட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கேரட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம்.மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது.நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் ஜீரணத்திற்கு உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும்.ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது.வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வரமால் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கலாம்.கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறுது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகும். எலும்புகள் உறுதியாகும்.முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும்.தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.சருமத்திற்கு பொலிவையும், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது. கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக் கண் போன்றவற்றை குணமாக்கும்.

கேரட்டின் மேல் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருகி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.கேரட் சாறுடன் பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும்.  மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும். தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தலாம்.ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மூட்டுவீக்கம், வாத நோய்கள் தீரும்.மலட்டுத் தன்மையை மாற்றும் வைட்டமின் ‘ஈ‘ நிறைந்து காணப்படுகிறது.கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கேரட் ஜூஸ் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸை குடிக்க வேண்டும். கேரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல்படும் தன்மை கொண்டது. வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லைகளுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும்.

இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.நீண்டகாலமாக அல்சர்’ உள்ளவர்கள், காரம் சாப்பிட்டதால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். மறுபடியும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.றீ கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்.

ஜுஸ் எடுப்பது எப்படி..? :- கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம். 
+

உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்..!

இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. புதுபுது நோய்களால் ஏராளமனோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது.

இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகிய வை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மாரடைப்பு ஏற்படுவது ஏன்?புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை.

*குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவைகள்.
அறிகுறிகள்

*மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

*நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

*மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம்.

*வாந்தி, இருமல், படபடப்பு மற்றும்20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

*தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.நோயைக் கண்டறிவது எப்படி

*இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி  எடுக்கப்படுகிறது. இசிஜி மூலம் இதயத்துடிப்பின் வேகம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும், மாரடைப்பால் இதய தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம்.

*ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*இதயதசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய ரத்த பரிசோதனைகள் உதவும். மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம். எக்கோகார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை. கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்பதை உறுதியாக கண்டறிய முடியும்.
முதலுதவி சிகிச்சை

*மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

*மாரடைப்பு ஏற்படும் ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

*நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

*நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

*நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து நோயாளிக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மாறுபடும்.

*சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் இறுக்கமான உடைகளை தளர்த்தி பின்னர் படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.

*பல நேரங்களில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களை கொண்டு ரத்தக்குழாய்களை விரிவடைய செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

*மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் பெரும் பாலும் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

*சில நேரங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். 
+

மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகுமாம்.. - ட்ரைப்பண்ணுங்க..!

தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்...சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.

இதன் அடுத்தக்கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும்பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா டீ குடித்தால் நல்லது. மசாலா டீ என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப்பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில  நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

தடைநாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பால் தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.வறட்சியான உணவுகள் வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.
+

குழந்தைகள் நோய்களுக்கு தீர்வு..! - இதோ உங்களுக்காக...

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள் ளது. இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் செலுத்த வேண்டிய சிறப்பு கவனம்.  குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள் ளது. இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி  குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.
அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.

அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள்,  பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால்  உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

ரெசிபி:-நவதானியக் கஞ்சி: முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவை
யில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த உணவை துவங்கலாம்.

வெஜ்ரைஸ்: கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.

ஸ்வீட் ஆப்பிள்: ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்:-குழந்தை பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக் காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும். கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல் கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.

கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட்,  பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக் கொடுக்கவேண்டியதில்லை என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் விடவும். அது  கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய் தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில் இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம்.

கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.

முற்றிய தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

6 மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.

கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.

கேழ்வரகை முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம். 
+