05/08/2014

Leave a Comment

அழிந்து வரும் சரிவிகித உணவு கலாச்சாரம்..!

அறிவியல், கணிதம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு முன்னோடியாக விளங்கிய இனம் தமிழினம். செய்யும் வேலைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சரிவிகித உணவு வகைகளையே நம்மவர்கள் உட்கொண்டு வந்தனர்.

சரிவிகித உணவிற்கு எடுத்துக்காட்டாய் சாதம், பருப்பு, ரசம், காய்கறிகளின் கூட்டு, பொறியலை துவக்கப்பள்ளி பாடங்களில் படித்தது நினைவில் இருக்க கூடும். சாதத்தில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரோட்டீனும், காய்கறிகளில் வைட்டமின், மினரல், பைபர் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருந்தாலேயே இது சரிவிகித உணவு என கூறப்பட்டது. இந்த சரிவிகித உணவு முறையுடனான தமிழனின் உறவு தற்போது முறியும் தருவாயில் இருக்கிறது. முன்னதாக ராகி, கம்பு, சோள வகை உணவுகளுடனான தமிழனின் உறவு முறிந்து பல வருடங்கள் கடந்து விட்டன.

தற்போது பெருகி வரும் பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு கலாச்சாரத்தால் கவரப்பட்ட தமிழ் இனம் மெல்ல மெல்ல அதன் சுவைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. ருசிக்கு சாப்பிடும் எண்ணமும், சோம்பேறித்தனமும் மேல்நாட்டு உணவு வகைகள் இங்கு காலூன்ற காரணமாகி விட்டன. இதன் விளைவாக வீதிக்கு வீதி தமிழன் பாஸ்ட் புட், தமிழன் பீட்சா கார்னர் போன்ற பெருமை மிகு பெயர்களை தாங்கிய உணவு விடுதிகள் இங்கு பெருகி விட்டன. பெருகியும் வருகின்றன.

இந்த நூற்றாண்டின் பிரபல நோய்களாக விளங்கும் சுகர், பிபி உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையே இந்த மேலை நாட்டு உணவு கலாச்சாரம் தான். அதனால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாத்து தப்பி பிழைப்பதற்காக, பாரம்பரிய உணவு முறைகளுடனான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழினம் வந்திருக்கிறது.

மேலைநாட்டு உணவு முறைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உணவு முறையியலாளர்கள் கூறுகையில், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்ஸ், புரோட்டீன்ஸ், பைபர் போன்ற அனைத்து சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவே ஒருவரது வாழ்நாளை தீர்மானிக்கும். மேற்கத்திய உணவு வகைகளின் மூலம் மேற்கண்ட சத்துகள் எதுவும் நமது உடலுக்கு கிடைக்காது.

இதன் சுவைக்கு அடிமையாகி தொடர்ச்சியாக இந்த உணவுகளை உண்ணும் போது, ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் ஏற்படும். உதாரணமாக விட்டமின்-ஏ குறைபாட்டால், கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். செய்யும் வேலைகளுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதினால் உடல்பருமனும் ஏற்படும். உடல்பருமனே 25 முதல் 30 வயதிற்குள்ளாக சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணம்.

இந்த உணவு முறை மாற்றத்தால் பெண்கள் பூப்பெய்தும் வயதில் கூட மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனால் பெண்கள் சராசரியாக பூப்பெய்த வேண்டிய 14 வயதிற்கு முன்னதாக, அதவாது 11-12 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். மேல்நாட்டு உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் மிதமிஞ்சிய வளர்ச்சியால், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து, இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காகவும், நூடுல்ஸ் வகைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்களாலும் அல்சர், குடல் புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். பீட்சா தயாராகும் மைதாவில் நார்ச்சத்து இல்லாததால், மேற்கண்ட நோய்களுடன் இலவச இணைப்பாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் கிடைக்கும். இதை எல்லாம் தவிர்க்க கலோரி, கொழுப்பு சத்துகள் குறைவாகவும், புரதம், இரும்பு, நார்ச்சத்துகள் அதிகமாவும் உள்ள நமது பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றில் மேற்கண்ட சத்துகள் முழுமையாக உள்ளன. இதனுடன் தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலமும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்றனர்.

மருத்துவதுறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால், எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். ஆனால் நலமுடன் வாழ்கிறோமா?

0 comments:

Post a Comment